Saturday 5 January 2013

கும்கி - யானை





Director: Prabhu Solomon
Music Director: D. Imman
Lyricst: Yugabharathi
Vikram Prabhu, Lakshmi Menon, Thambi Ramaiya 


படம் வந்து ஒரு மாசம் கழிச்சு அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப நல்லது. 
ஏன்னா,
  •  அப்போதானே எல்லோரும் படத்தை பார்த்து முடிச்சிருப்பாங்க. முதல் ரெண்டு நாள்ல எழுதினா யாருக்குமே புரியாது. எவ்வளவு மார்க் போட்டிருக்காங்கன்னு மட்டும் தான் பார்ப்பாங்க. 
  • அதே மாதிரி, நான் எழுதுறதும் அவங்களுக்கு புரியும். அவங்களும் நான் படத்தை விமரிசித்ததில் ஏதாவது தப்பு இருந்தா சொல்ல முடியும்....

அப்பாடா...லேட்டா படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு எத்தனை சப்பைக்கட்டு சொல்ல வேண்டியிருக்கு....

சரி...இனி கும்கி யானையை பார்ப்போம்...

இந்த படத்துக்கு கும்கின்னு பெயர்  வச்சிருக்காங்க....ஊரு பக்கம் இருக்கிறவங்களுக்கு கும்கிக்கு அர்த்தம் தெரியும். சிட்டியில இருக்கிறவங்களுக்கு தெரியவே தெரியாது. ஒரு லைன் அதை பத்தி சொல்லியிருக்காங்க....அது போதுமான்னு தெரியலை...

இந்த படத்தை ரெண்டாக பிரிக்கலாம்....
ஒண்ணு காதல், ரெண்டு யானை


  • காதல்


காதலா இது...கவிதை + காவியம் மாதிரி இருக்கு.....காதலின் முதல் பாதியில் ஹீரோ விக்ரம் பிரபு புதுமுகம் மாதிரியே இல்லாமல் அழகாய் உருகுகிறார். யானை பாகன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகு. நன்றாக பொருந்துகிறார். 




கதாநாயகி லட்சுமி மேனன் தானா என்பதில் எனக்கு  சந்தேகமாக இருந்தது....சுந்தரபாண்டியனில் பெரிய பெண்ணாக தெரிந்த இவர் இதில் சின்ன பெண்ணாய், அழகாய், மிக அழகாய்....ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் இடை கூடவா எடை கூடும்?...ம்ம்ம்....யோசிக்க வேண்டிய விஷயம்தான்....



காதலின் கிளைமாக்ஸ் 


படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஹீரோ பேசும் வசனம் 'மதம்  பிடிச்சிருந்தது உனக்கில்லடா மாணிக்கம்...எனக்குதான்...' என்பதும், 'நான் ஏண்டி உன்னை பாத்தேன்'  என்னும் போது விழும் ஒரு துளி கண்ணீரும் யானைக்கும் அந்த மதம் பிடித்த காதலுக்குமாக ஒரு சமாதியை அழகாய் கட்டிவிடுகிறது...டைரக்டர் பிரபு சாலமன் தான் சொல்ல வந்ததை மிக தெளிவாய் நம் முன் வைத்திருக்கிறார்...

அந்த காதல் தவறில்லை என்று நம் மனதுக்கு படும்படியாகவும் எடுத்திருக்கும் விதம் அருமை.  அவனின் காதல் தான் அனைத்துக்கும் காரணம் என்கிற போது அதை எவ்வளவு அழுத்தமாய் நியாயப்படுத்த முடியுமோ அதை நேர்த்தியாக செய்த பிரபு சாலமனை பாராட்டியே ஆகவேண்டும்...


அவன் காதலை தப்பாக்க யானையை கொன்றிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. ஆனால் அந்த ஒரே ட்விஸ்ட்டில் தான் காதலை ஆழமாய் நம் மனதில் பதியவைக்க முடிகிறது. கதை என்ற ஓன்று இருப்பதை காட்டுகிறது.


  • யானை 

யானையை சொல்லணும்....முதல்ல அதுக்கு திருஷ்டி சுத்தி போடணும். அப்புறம் ஒரு அவார்ட் கூட கொடுக்கலாம். அவ்வளவு க்யூட்டா இருக்கு....நான் என் சிஸ்டம் வால்பேப்பரில் கூட யானையை வைத்துவிட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்....

அந்த யானையின் கண்ணை அடிக்கடி காட்டுவதால் யாராவது ஏதாவது சொன்னால் யானை என்ன நினைக்குதுன்னு அது கண்ணை பார்க்கும் ஆசை வருகிறது நமக்கு. 



முதலில் வரும் 'கொம்பன்' என்று சொல்லப்படும் யானை மிக ஆக்ரோஷமாய் அனைத்தையும் அழித்து துவம்சம் பண்ணி மதம் பிடித்த வெறியை நல்லா காட்டியிருக்காங்க. அந்த யானையை விரட்ட தான் நம்ம கும்கி வருகிறது உள்ளே. எப்போ அந்த யானை வரும்ன்னு ஊர்க்காரங்களை விட நம்மை ரொம்ப உசுப்பு ஏத்தி விட்டு விடுகிறார் டைரக்டர்.

ஆனால் அந்த யானை கடைசியில் வரும்போது அதன் கம்பீரத்தையோ ஆதிக்கத்தையோ காண முடியவில்லை. 


யானை கிளைமாக்ஸ் 


ஒரு நாள் கூட ஓடாத படங்களில் கூட கிளைமாக்ஸ் சண்டை அரை மணி நேரமாவது ஓடும். கடைசியில ஹீரோ தான் ஜெயிப்பாருன்னு தெரிஞ்சும் தாங்க முடியாத தலைவலியோட அதையெல்லாம் நாம பார்த்திருக்கோம். 

ஆனால் இந்த படத்துல டைரக்டர் நம்மை ஏமாற்றிய இடம் இது ஒண்ணுதான். ஒரு இருபது நிமிஷமாவது யானைகளின் சண்டையை காண்பித்திருக்கலாம். எல்லாமே கிராபிக்ஸ் வேற. சரி அதையாவது நல்லா காட்டியிருக்கலாம். சண்டை நடக்கும் போது எது மாணிக்கம் எது கொம்பன் என்று வித்தியாசமே தெரியவில்லை. 

அந்த யானையின் சாவு ஹீரோவை வேற மாதிரி யோசிக்க வைத்தா நாம 'ஐயோ யானை செத்து போச்சே' என்று யானையை மிஸ் பண்ணிட்ட பீலிங்கோட இருக்கோம். நாமளும் ஹீரோவும் வேறுபட்டு போகிறோம் அந்த யானையின் மறைவில்.....

தம்பி ராமையா 


எல்லாத்தையும் சொல்லிட்டு தம்பி ராமையாவை சொல்லாம விட்டா பாவம் பிடிக்கும் நமக்கு. முக்காவாசி கதையை அவர்தான் தன் முணுமுணுப்பால் சொல்லுகிறார். அப்பப்போ சந்தடி சாக்கில ஹீரோவையும் யானையையும் கலாய்த்து தள்ளுகிறார். நல்லா நடிச்சிருக்கார் அவர். இந்த முறை Supporting Actor அவார்ட் அவருக்கு கண்டிப்பா கிடைக்கும்.....

ஆனா ஒரே ஒரு சந்தேகம், எப்படி அவர் மட்டும் இவ்வளவு இங்கிலீஷ் வார்த்தைகள் பேசுகிறார்.
அடுத்தது அவர் மனசுக்குள் பேசும் காட்சிகள் அதிகம். நமக்கே சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது.  

ஹீரோ கம்மியா பேசுறார்...ஹீரோயின் பேசவே மாட்டேங்கிறா....நமக்கே தெரியும் யானை பேசாதுன்னு ...தம்பி ராமையாவை தவிர யாராவது வாயை திறந்து பேசமாட்டங்களான்னு தோணுது. 


அப்புறம் மாதையன் சமத்தான அப்பாவா வந்து போறார்...


இசை 

பாட்டு எல்லாமே உருக்குகிறது. இமானின் இசையில் யுகபாரதியின் வரிகள்....வசீகரம்....
பென்னி தயால், இம்மான், ஹரிசரண், ரஞ்சித், அல்போன்ஸ் என்று பாடகர்கள் களைகட்டியிருக்கிறார்கள்.....கேட்டுகிட்டே இருக்கலாம் போல.....
   

கும்கி......


மிருகங்களை வைத்து படம் எடுத்தவர்கள் நம்மை ஏமாற்றியதில்லை இதுவரை. அந்த படங்களில் எல்லாம் மிருகங்களை பயன்படுத்தி இருப்பாங்க. இந்த படத்தில் மட்டும் தான் கதையோட பின்னியிருக்காங்க அதுங்களையும்....

பிரபு சாலமனுக்கு தாராளமா தரலாம் யானை பாகன் பட்டம்....அதுவும்கும்கி யானை பாகன்.....


2 comments:

  1. இன்னைக்கு தான் உங்க தளத்தை பார்த்தேன், என்னை போலவே நீங்களும் சினிமாவிற்கு மட்டும் ஒரு தளம் வைத்து உள்ளீர்கள் . :):)

    நீங்க சொல்லுவது போல் எனக்கும் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிக்க பிடிக்கும், அப்பொழுது தான் விமர்சனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
    கும்கி படத்தை பற்றி நீங்க ரொம்ப ஆழமா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. எனக்கு மாணிக்கம் தவிர ஹீரோயின் அப்பா கதாபாத்திரம் ரொம்பவே பிடித்து இருந்தது. அவர் பேசும் வசனங்கள் செம ஷார்ப். ஹீரோ முதல் படம் என்பதால் பெரியதாய் அவரிடம் எதிர்பார்க்க வில்லை. கொம்பனுக்கு வெறும் வாய் பில்ட் ஆப் மட்டுமே குடுத்தது ஒரு மைனஸ். மாணிக்கம் உண்மையில் ஒரு கும்கி யானை. :):)

    //சண்டை நடக்கும் போது எது மாணிக்கம் எது கொம்பன் என்று வித்தியாசமே தெரியவில்லை.//
    உண்மை தான்..எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை..
    படம் எனக்கு முத தடவை பார்க்கும் போது பிடிக்கல, ரெண்டாவது தடவை பார்க்கும் போது மிகவும் பிடித்து இருந்தது.

    ReplyDelete
  2. Pls remove word verification while posting comments..
    Steps to Remove it:
    1) Go to Blogger --> Dashboard -> Settings.
    2) Click Posts and comments --> Show word verification --> Change this option to "No"..

    This will remove the word verification...

    Happy Blogging..!!

    ReplyDelete